Sunday, February 27, 2011

திருப்பி அனுப்பப்பட்ட திருமா

0

 
''இந்திய அரசின் ஆசியோடுதான் இலங்கை அரசு ஆட்டம் போடுகிறது. இலங்கையின் இனவெறித்​தனத்தையும் அத்துமீறலையும் இந்திய அரசு கண்டிப்பதே இல்லை!'' - காங்கிரஸ் அரசுக்கு எதிராக மீண்டும் கனல் கக்கத் தொடங்கி இருக்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
 விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இலங்கைக்குப் போன திருமாவளவன், சிங்கள அதிகாரிகளால் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத  குறையாக விரட்டப்பட்டார். அதைத் தொடர்ந்துதான் ஆர்ப்​பாட்டம், ஆவேசம் என இந்திய, இலங்கை அரசுகளுக்கு எதிராகக் கொந்தளிப்பு கிளப்பி வருகிறார் திருமா. கூட்டணி விவகாரங்கள் தமிழக அரசியலைக் கலங்கடிக்கும் நிலையில், ஈழ விவகாரக் கோபம் குறையாமல் இருக்கும் திருமாவை சந்தித்தோம்.

''மேதகு பிரபாகரனின் தந்தை அய்யா வேலுப்​பிள்ளை இறந்தபோது அஞ்சலி செலுத்தச் சென்ற நான், வவுனியாவில் வைத்து பார்வதி அம்மாளை சந்தித்தேன். அய்யாவின் உடலைப் பார்த்து, 'அய்யா... அய்யா...’ என்கிற வார்த்தைகளையே குழந்தையைப்போல் சொல்லிக்கொண்டு இருந்​தார். பொது மருத்துவமனையில் அம்மா சிகிச்சைபெற்ற நிலையைக் கண்டு நிலைகுலைந்து போனேன். அவருக்கு உதவி செய்ய ஒரு ஆள்கூட அங்கு இல்லை. தமிழர்களின் அடையாளத் தலைவனான அண்ணன் பிரபாகரனின் தாய், ஆதரிக்க ஆள் இல்லாமல் கிடந்த கோலம் இன்றைக்கும் என்னை நொறுக்குகிறது. அம்மா இறந்துவிட்டார் எனத் தெரிந்ததும் அவருடைய கால்மாட்டில் நின்று கதற வேண்டும் போலிருந்தது. அதனால்தான் அவசரகதியில் இலங்கைக்குப் போனேன்.

ஏற்கெனவே ஆறு தடவை நான் இலங்கைக்குப் போய்வந்து இருக்கிறேன். 'நான் இந்திய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர். நீங்கள் என்னை அவமதிப்பதாக நினைத்து, இந்திய நாட்டையே அவமதிக்கிறீர்கள்’ என நான் சொன்னதற்கு, 'நீங்கள் வருவதை எங்கள் நாடு விரும்பவில்லை!’ எனச் சொன்னார்கள். 'தாயின் துக்க நிகழ்வுக்கு வந்திருக்கும் என்னைத் தடுக்காதீர்கள்!’ என ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடியும் அவர்கள் மனம் இரங்கவில்லை!''


''இந்திய நாட்டின் எம்.பி-யைத் துரத்தி அடிக்கிற அளவுக்கு இலங்கை அரசுக்குத் தைரியம் வந்தது எப்படி?''

''இந்திய அரசைப் பார்த்து அவர்கள் எவ்விதப் பயமும்கொள்ளவில்லை. இந்திய அரசின் 'அடா​வடி செல்லப்பிள்ளை’யாகத்தான் இலங்கை அரசு செயல்படுகிறது. அந்த தைரியத்தில்தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... யாரை வேண்டுமானாலும் தாக்க​லாம் என அட்டூழிய ஆட்டம் போடுகிறது இலங்கை. இந்திய அரசின் எம்.பி-யான என்னையே விரட்டி அடிக்கிறார்கள் என்றால், யார் கொடுக்கும் துணிச்சல் என்பது அப்பட்டமான ஒன்றுதானே!''

''ஈழ விவகாரத்தின் அத்தனை விதமான கோரங்களுக்கும் காங்கிரஸ் அரசின் உதவி இருப்பதாகச் சொல்லும் நீங்கள், எப்படி இன்னமும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கிறீர்கள்?''

''தமிழக அரசியல் நிலையை அறிந்தவர்களுக்குத்​தான் என் நிலை தெரியும். 18 மாதங்கள் வைகோவை பொடா வழக்கில் உள்ளே தள்ளியவர் ஜெயலலிதா. இன்றைக்கு அம்மையாரின் அணியில்தான் வைகோ இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸோடு முறித்துக்கொண்டு போன பா.ம.க. இப்போது மீண்டும் அதே கூட்டணியில்! அப்படி இருக்க, எங்களுடைய நிலைப்பாட்டை மட்டுமே கேள்விக்குறியாக்குவது எந்த விதத்தில் நியாயம்? அவர்களின் கூட்டணியில் இருக்கிறேன் என்பதற்காக, என் தொண்டையை அறுத்தா எறிந்துவிட முடியும்?''

''நீங்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்துக்கு உரிய பதிலைக்கூட காங்கிரஸ் அரசு சொல்லவில்லையே?''

''பதில் இருந்தால்தானே சொல்வதற்கு? இலங்கைக்கு எல்லா விதங்களிலும் துணையாக இருக்கிறவர்கள் எனக்கு எப்படி விளக்கம் சொல்​வார்கள்? நாங்கள் அங்கம் வகிக்கும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸும் அங்கம் வகிக்கிறது. அதற்காக முகத்தை முறுக்கிக்கொண்டு என்னை வெளியேறச் சொல்கிறீர்களா? என்னை அரசியல் அரங்கில் இருந்தே ஒழித்துக்கட்ட நினைத்த ஜெயலலிதாவோடு நான் சேர முடியுமா? நான் ஒரு பத்திரிகையாளரோடு பழகுகிறேன். அந்தப் பத்திரிகையாளர் ஒரு ரவுடியோடு நட்பு வைத்திருக்கிறார் என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தமிழக அரசியலின் கட்டமைப்புப் புரியாமல் எங்கள் மீது பழி போடுவது கொஞ்சமும் நியாயமற்றது!''

''உங்களுடைய ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தரப்பும் ஆதரவு தெரிவிக்கவில்லையே?''

''யாருடைய ஆதரவும் எங்களுடைய போராட்​டங்களுக்குத் தேவை இல்லை. கொள்கை ரீதியான முன்னெடுப்புகளுக்கு யாருடைய உதவியையோ, ஆதரவையோ நாங்கள் எதிர்​பார்க்கவில்லை. நாங்கள் தி.மு.க-வுடன் பூண்டி​ருப்பது தேர்தல் உறவுதான். எங்களுடைய உணர்வு ரீதியான போராட்டங்களுக்கு தி.மு.க. தரப்பு ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை. எங்களுக்கு அதுவே போதும். முதற்​கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வந்த நான், துணை முதல்வர் ஸ்டாலினிடம், 'பார்வதி அம்மா​ளுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை போகிறேன்’ எனச் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அதற்கு அவர் எவ்வித மறுப்பும் சொல்லவில்லை. தமிழ்த் தேசியம் பேசுபவர்​களே எங்களை விமர்சிக்கும்போது, பிறருடைய ஆதரவை நாங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?''

''தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. கெடுபிடி காட்டுவதன் பின்னணியில் காங்கிரஸின் கைங்கரியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?''

''இப்போது நடப்பது காங்கிரஸ் அரசுதானே... அப்படி என்றால் அரங்கேற்றப்படும் நிகழ்வுகளுக்கு வேறு யார் காரணமாக இருக்க முடியும்?''  

''அ.தி.மு.க. தரப்பில் இருந்து உங்களுக்குத் தொடர்ந்து அழைப்பு வருவது உண்மைதானே?''

''எங்களிடம் பேசியவர்களிடம், 'எங்களின் நிர்வாகக் குழுவிலேயே தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதாக முடிவு எடுத்து​விட்டோம். எந்த ஊசலாட்டமும் இல்லாத நிலையில் அணி மாறும் எண்ணமே இல்லை. நாங்கள் தேவையா இல்லையா என்பதை தி.மு.க-தான் தீர்மா​னிக்க வேண்டும். அப்படி ஒரு சூழல் அமைந்தால் பேசலாம்!’ எனத் தெளிவாகச் சொல்லி​விட்டோம்!''  

''ஆரம்பம் தொட்டே தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் உங்களை விட்டுவிட்டு, முதல் ஆளாக பா.ம.க-வைக் கூட்டணிக்கு இழுத்து ஸீட் ஒதுக்கீடு செய்தது, உங்களைக் கோபப்​படுத்தவில்லையா?''

''கலைஞரின் சாதுரியம் எத்தகைய சாதிப்புகளை நிகழ்த்தும் என்பதற்கு பா.ம.க-வுக்கு 31 ஸீட்டுகள் ஒதுக்கிய நிகழ்வு ஓர் உதாரணம். அதன் மூலமாக தமிழக அரசியல் அரங்கில் பலருடைய திட்டங்களையும் கலைஞர் தவிடு​பொடியாக்கி இருக்கிறார். விஜயகாந்த் அதிக ஸீட்கள் கேட்டு டிமாண்டைக் கூட்டவும், காங்கிரஸ் அதிக ஸீட்கள் கேட்க முடியாத அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளானதும் கலைஞரின் சாதுரியத்தால்தான். அத​னால் பா.ம.க-வை முதலில் அழைத்ததில் எங்களுக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அதே நேரம் எங்களுக்கான ஸீட் ஒதுக்கீட்டை தி.மு.க. நிச்சயம் நிறைவாகச் செய்யும் என்று முழுமையாக நம்புகிறோம்!''

''சில மாதங்களுக்கு முன்பு உங்களுடைய கட்-அவுட்டுகளை பா.ம.க-வினர் உடைத்த சம்பவங்கள் நடந்தன. இத்தகைய கசப்புகளை எல்லாம் கடந்து எப்படி கூட்டணியில் நீடிக்கப்​போகிறீர்கள்?''

''சமீபத்தில்கூட கடலூர் மாவட்டம் கம்பளிமேடு என்கிற கிராமத்தில் எங்கள் மக்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டு இருக்கிறார். கொலைத் தாக்குதல் நடத்தியவர்களில் பா.ம.க-வினர் மட்டுமல்லாது, இன்ன பிற கட்சியினரும் இருந்திருக்கிறார்கள். எங்களைத் தற்காத்துக்​கொள்ளும் போராட்டத்தையும், எங்களை வலிமைப்படுத்திக்கொள்ளும் உறவையும் சம காலத்தில் பேணவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால், இதை எல்லாம் மனதில்வைத்து நான் கூட்டணியைத் துறக்க முடியுமா?''

''உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்... கூட்டணிக்காக எதையும் சகித்துக்கொள்ளும் நிலையில்தானே நீங்கள் இருக்கிறீர்​கள்?''

''நெருக்கடிகளைச் சமாளித்தபடியே பயணத்தைத் தொடர வேண்டிய நிலையில், எதையும் சகித்துத்தானே ஆகவேண்டும்! சுயத்தை இழக்க வேண்டிய மோசமான களத்தில் நான் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். 'சுயத்தை இழக்கக் கூடாது’ என நினைத்தால் அரசியலே வேண்டாம் என நினைத்து துறவறம் போகத்தான் முடியும். இல்லையேல், பொது நீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு இருக்கும் எங்கள் சமூகத்துக்காக எதிர் நீச்சல் போட வேண்டும். எல்லோரும் கூட்டணிக்காகவும் ஸீட் பேரத்துக்காகவும் ஓடிக்கொண்டு இருக்கையில், ஈழத் தாய்க்கு அஞ்சலி செலுத்த ஓடியவன் நான். என் சுயம் இன்னமும் மிச்சம் இருப்பதன் சாட்சிதான் அந்தக் காட்சி!''

0 comments:

Post a Comment